திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒருமையாக செயல்பட்டு திமுகவை வீழ்த்தி எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சியினரை சந்திக்க எனக்கு என்ன பயம் இருக்கிறது? ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம் உள்ளது. அவர்களை பார்க்கும்போது சொல்லிவிட்டு செல்கிறேன், அனைத்தும் நன்றாக நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.
மேலும் ஆளுநர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு நடைமுறை உள்ளது. ஆளுநருடன் இப்படி சண்டை போட்டுக்கொண்டிருந்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?' என்றார்.
இதையும் படிக்க | அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை பேட்டி