ஈரோடு: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய நிலையில் ஈரோடு மண்டலத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கின.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக போக்குவரத்து துறை ஏற்க மறுத்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனைக்கு அரசு பேருந்துகள் திரும்பி வந்தன. ஈரோடு போக்குவரத்து மண்டலத்தில் 13 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 4,600 தொழிலாளர்களில் சுமார் 3,500 பேர் வேலை போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், சுமார் 50 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை எனவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேருந்துகளை இயக்க கூடாது என கூறி பணிமனையில் இருந்து வெளியே சென்ற பேருந்துகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் பணிமனையில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு சென்றன.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மண்டலத்தில் 80 சதவீத பேருந்துகள் இயங்குகின்றன. செவ்வாய்க்கிழமை மதியம் பணிக்கு வர வேண்டியவர்களின் எண்ணிக்கை குறைந்தால் தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்யவும் தயார் நிலையில் இருக்கிறோம் என்றார்.