சென்னை: அர்ச்சகர்களின் முகங்களில் அச்ச உணர்வு இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்தை அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர்.
அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ஆளுநர் ரவி இன்று காலை வழிபாடு நடத்தினார்.
வழிபாட்டை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் ஆளுநர் ரவி வெளியிட்ட பதிவில்,
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.
பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய அர்ச்சகர்கள், “இன்று சிறப்புப் பூஜை நடைபெறுவதால் இரவு முழுவதும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். அதனால் முகம் சோர்வாக காணப்பட்டிருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.