த.வெ.க. மாநாட்டுத் தேதி! விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த விஜய்.
vijay
தவெக தலைவர் விஜய்(கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று நடிகர் விஜய் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

மேலும், நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

“தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வா? ஆட்சியர் விளக்கம்

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்.

இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். வாகை சூடுவோம்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடைபெற காவல்துறையிடன் அனுமதி பெற்ற நிலையில், மாநாடு தேதி மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும், ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com