
சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா என்றும், எஃப்ஐஆர் வெளியிட்டு, புகார் அளிக்க வருவோர் அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் பதில் அளித்தும் வருகிறார்கள். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிக்க.. பான் அட்டையை புதுப்பிக்க.. என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம்!
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், சென்னை காவல் ஆணையர் அவசர அவசரமாக யாரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கொடூரம் நேர்ந்துள்ளது. கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பில் திமுக அலட்சியமாக செயல்படுகிறது. முதல்வர் ஏன் தற்போது வரை அண்ணா பல்கலை விவகாரத்தில் விளக்கம் தரவில்லை.
கைதான ஞானசேகரனின் செல்போனில், அவர் யாரிடம் பேசினாரோ, அந்த தொலைபேசி எண்ணை வைத்தே எளிதாக கண்டுபிடித்துவிடலாமே. அதனை ஏன் செய்யவில்லை. சார் யார் என்பதை இந்த அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியே கசியவிட்டது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், முதல்தகவல் அறிக்கையை வெளியிட்டு, புகார் அளிக்க வருவோருக்கு ஒரு அச்ச உணர்வை இந்த அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், போராடியவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்த அரசு. போராடிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை. ஆனால் அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராடிய திமுகவினர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கலாம். ஆனால் கைது செய்யப்படவில்லை என்று, போராட்டம் நடத்திய திமுகவினர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்ததற்கு, ஆர்.பி. உதயகுமார் கருத்துக் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.