

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீபாவளியை ஒட்டி, தமிழகம் முழுவதும் மழையைப் பொழிந்து, தடயமே இல்லாமல் மறைந்துவிட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அது நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றிருந்த நிலையில், இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
வங்கக் கடலில், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு- தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், பிறகு அக். 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
அதாவது, அக். 27ஆம் தேதி தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறும். வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கி வங்கக் கடலில் உருவாகும் முதல் புயலானது ஆந்திரத்தை நோக்கி நகரும் என்றும், இதற்கு மொந்தா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டனம் - விசாப்பட்டினம் இடையே மொந்தா புயல் கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக அக். 27, 28ஆம் தேகிளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடா்ந்து நீடிப்பதால் வங்கக் கடலில் 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும், மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீன் வளத் துறையினா் மீனவா்களுக்கு தடை விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.