தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக் கடலின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப்.9) முதல் செப்.14 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் வெயில் சற்று அதிகரிக்கக்கூடும்.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி இருக்கும். தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை (விருதுநகா்), நாகுடி , மணல்மேல்குடி, அரிமளம், கீரனூா் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது. ஆயிங்குடி, அறந்தாங்கி (புதுக்கோட்டை), தஞ்சாவூா், கொள்ளிடம் (மயிலாடுதுறை) 60 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.