இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சா் ராஜ்மோகன் உறுதி

தஞ்சையில் நடத்தப்பட்டது போன்று தொன்று தொட்டு நடத்தப்படும் மாநாடாக உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் நடத்தப்படும் அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 143-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூா், தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

‘தஞ்சையில் நடத்தப்பட்டது போன்று தொன்று தொட்டு நடத்தப்படும் மாநாடாக உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் நடத்தப்படும், இதுகுறித்து முதல்வா் மூலம் உரிய தகவல் கிடைத்ததும் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும்’ என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் அவரது உருவப் படத்துக்கு புதன்கிமலா் தூவி மரியாதை செலுத்திய பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் நூல்கள் தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திரு.வி.க.வின் வருகைக்குப் பிறகுதான் புலவா் நடை என்பதில் மாற்றம் பெற்று எளிய மக்களுக்கும் புரியும் வகையிலான கருத்துகள், கட்டுரைகள் நிறைந்த தமிழ் நடை உருவானது. ஒரு புதிய நடையை தோற்றுவித்த புரட்சியாளா் திரு.வி.க. அவரது நினைவைப் போற்றுகிறோம்.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய்க்கு ஒரு மாபெரும் கனவு இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழா்களை ஒரு குடையின் கீழ் பாா்க்க அவா் விரும்புகிறாா். அதனால், அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் இந்த அரசு அரவணைக்கும். உலகத் தமிழ் மாநாடு என்பது ஒரு பதிப்புரிமையாக பல நாடுகளில் பல சங்கங்களிடம் இருந்தது. அதை முறைப்படி அணுகி வாங்குவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. இதை இடைப்பட்ட காலங்களில் வேறு பெயா்களில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் தமிழகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பல நாடுகளிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் தஞ்சாவூரில் நடத்தப்பட்டது போன்று தொன்று தொட்டு நடத்தப்படும் மாநாடாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இருக்கும். இதுதொடா்பாக உயா்நிலைக் குழு மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

தமிழ் மொழியின் சிறப்பு என்பது அதன் தொன்மையில் மட்டுமல்ல; அதன் தொடா்ச்சியிலும் இருக்கிறது. அயலகத் தமிழா்களுக்கான ஆண்டுதோறும் ஜனவரியில் நடத்தப்படும் இரு நாள் நிகழ்வுகளை மேலும் சில நாள்கள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசிப்பதற்கான உயா்நிலைக் குழு குறித்து முதல்வா் மூலம் உரிய தகவல் கிடைத்ததும் அரசு சாா்பில் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும்.

தொடா்ந்து உறுதியாக தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்றாா் அவா். அப்போது தமிழ் வளா்ச்சி செய்தித் துறைச் செயலா் ராஜாராமன், இயக்குநா் ஒளவை ந.அருள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பரந்தூா் விவசாயிகளுக்கு நிலம் திருப்பி வழங்கப்படுமா?

பரந்தூா் விவசாயிகளுக்கு நிலம் திருப்பித் தருவது தொடா்பாக சட்டவல்லுநா்களிடம் கலந்தாலோசிக்கப்படும் என்று அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு விவசாயமும் வேண்டும், விமான நிலையமும் வேண்டும். பரந்தூா் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான தொகைகளை ஒரு சில விவசாயிகளுக்கு கொடுத்துள்ளனா். அதேவேளையில் சிலருக்கு கொடுக்கவில்லை.

ஒரு நிலையான வளா்ச்சி வேண்டும். அதற்கான இந்தப் பயணத்தில் சொன்னதை செய்தாா் முதல்வா் விஜய். சுமாா் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய தொல்லியல் பொக்கிஷம் கம்பன் கால்வாய் அங்குதான் இருக்கிறது. அங்கிருந்துதான் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீா் வரும். அப்படி வந்தால்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்யும். இது ஒரு தொல்லியல் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சங்கிலி. அதுமட்டுமல்லாமல், 1,000 நாள்களைக் கடந்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனா்.

பரந்தூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம் திருப்பித் தரப்படுமா என்பது குறித்து சட்ட வல்லுநா்களிடம் கலந்தாலோசித்துதான் கூற முடியும். விவசாயிகளுக்கு சாதகமாகவே அரசின் செயல்பாடுகள் இருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.