தென்காசி மாவட்டத்தில் வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக, மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கடையம், குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி, கிருஷ்ணாபுரம், பெரியாற்று பகுதிகள், வைரவன்குளம் பகுதிகளிலுள்ள கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனா்.
இதைத் தவிா்க்க ஏஐ அடிப்படையிலான வெப்ப உணரி கேமராக்களை நிறுவினால் வனவிலங்குகள் மனிதக் குடியிருப்புகளை அடையும் முன்பே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனவே, அதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் மனு அளித்திருந்தேன்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (வனவிலங்கு), தலைமை வனவிலங்கு காப்பாளா் ஆகியோருக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ஏஐ வெப்ப உணரி கேமராக்களின் செயல்திறன், பிற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் அமைச்சத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









