மோட்டோரோலாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், மோட்டோரோலா ரேஸர் மார்ச் 16ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
4ஜியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில், மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் 'மோட்டோரோலா ரேஸர்' குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மோட்டோரோலாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் இதுவாகும்.
மோட்டோரோலா ரேஸர் உயரமான 6.2 அங்குல பி-ஓஎல்இடி பேனலைக் கொண்டுள்ளது. இது 876x2142 பிக்சல்களுடன் திரைத்தன்மையும் கொண்டது. கைரேகை வைத்து போனை அன்லாக் செய்துகொள்ளலாம். இதனை மடிக்கும்போது, நீளம் 2.7 அங்குலமாக இருக்கும். 16 எம்.பி. பிரதான கேமராவும், 5 எம்.பி இரண்டாம் நிலை கேமராவையும் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. விரிவாக்க ஸ்டோரேஜ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இயங்குகிறது. 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 2,510 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
ஏற்கெனவே அமெரிக்காவில் பிரபலமான நிலையில் இந்தியாவில் வருகிற மார்ச் 16ம் தேதி அறிமுகமாக இருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்தியாவில் இதன் விலை குறித்த விபரங்கள் மார்ச் 16 அன்றே தெரிய வரும்.