/

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 479 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 23,900க்கு அருகில் நிறைவு!!

சென்செக்ஸ் 479.26 புள்ளிகள் சரிந்து 76,009.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 118 புள்ளிகள் சரிந்து 23,913.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 5:57 pm IST

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், ஆசியப் பங்குச் சந்தையில் நிலவிய குழப்பமான போக்கு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையால், முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 479.26 புள்ளிகள் சரிந்து 76,009.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 118 புள்ளிகள் சரிந்து 23,913.70 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி அதன் முக்கியத்துவம் வாய்ந்த 23,900 என்ற நிலைக்கு அருகில் சென்று வர்த்தகத்தை நிறைவு செய்ததது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2,057 பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில் 1,973 பங்குகள் சரிந்தன, மேலும் 165 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமானது. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் இன்று அதன் அதிகபட்ச மதிப்புான 76,627 புள்ளிகளாகவும், நிஃப்டி அதன் அதிகபட்ச மதிப்புான 24,089.8 புள்ளிகளாக பதிவானது.

30 நிறுவனங்களைக் கொண்ட சென்செக்ஸ் குறியீட்டில் எட்டர்னல், இன்ஃபோசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, ட்ரெண்ட் மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் சரிந்தன.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு 3% ஏற்றத்தைத் தொடர்ந்து, நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டிய பங்காகத் திகழ்ந்தது. அதன் போட்டியாளர்களான பஜாஜ் ஆட்டோ மற்றும் மாருதி சுஸுகி ஆகியவையும் தலா 1% ஏற்றம் கண்டன.

தொடர்ந்து மூன்று வர்த்தக அமர்வாக ஏற்றம் கண்ட நிலையில், இன்று 3% உயர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டிய பங்குகளின் பட்டியலில் இடம்பிடித்தது அதன் 52 வார உச்சத்தைத் எட்டியது.

நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களின் பங்குகள், வர்த்தக அமர்வின் முற்பகுதியில் கண்ட ஏற்றத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டன. நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் 0.5% முதல் 0.7% வரை உயர்ந்தன.

1.6% சரிந்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ், நிஃப்டி 50 குறியீட்டில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்ட பங்காக அமைந்தது. அதன் போட்டியாளரான மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் 0.6% சரிந்தது. நிதித்துறை நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தன. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் 0.8% முதல் 1.3% வரை சரிந்தன.

பங்கு ஒன்றுக்கு ரூ. 731.40 என்ற அளவில் தனது ஆறு மாத உச்சத்தை எட்டிய நிலையில், அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 10% உயர்ந்து, நிஃப்டி 200 மற்றும் நிஃப்டி 500 ஆகிய இரு குறியீடுகளிலும் அதிக லாபம் ஈட்டிய பங்குகளாக அமைந்தது. நிஃப்டி 200 குறியீட்டில், 7 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்ட, கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மிகவும் பின்தங்கிய நிறுவனமாக இருந்தது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்தார். மேற்கு ஆசிய நெருக்கடிக்கு, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இந்த மோதல் உடனடியாக முடிவுக்கு வரும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதே வேளையில், தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய 'தற்காப்பு' தாக்குதல்கள், நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் உயர்ந்தன. அதே நேரத்தில், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 821.75 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், 1.90 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 97.97 டாலராக வர்த்தகமானது.

Summary

Sensex closed 479.26 points and Nifty ended 118 points lower.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.