முரண்சுவை-9: என்ன எடிசன், எப்படி இருக்கிறீர்கள்?
தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு மிகப் பெரிய விஞ்ஞானி. அவர் தம் வாழ்நாளில் 1093 கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்தவர். இவருடைய சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால் எடிசன் மாணவனாக இருக்கும்போது ஆசிரிய


தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு மிகப் பெரிய விஞ்ஞானி. அவர் தம் வாழ்நாளில் 1093 கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்தவர். இவருடைய சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால் எடிசன் மாணவனாக இருக்கும்போது ஆசிரியர் அவருக்குத் தந்த பெயர் மண்டு, மக்கு என்பதுதான்.
எடிசன் அமெரிக்காவில் உள்ள ஒஹாயோ மாநிலத்தில், மிலான் என்ற ஊரில் 11-2-1847-இல் பிறந்தார்.
நாமெல்லாம் கனவு காண்பது தூக்கத்தில். எடிசன் விழித்திருக்கும்போதே கனவு கண்டார். காலத்தைப் பொன் போன்று கழித்தார். எடிசனுக்கு அவர் வாழ்ந்த காலம் போதவில்லை. நம்மில் பல பேர்களுக்குக் காலம் போகவில்லை.
எப்போதும் ஓய்வில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் எடிசன். 5 வயது சிறுவனாக இருந்தபோது, ஒருநாள் மாட்டுத் தொழுவத்தில் உள்ள வைக்கோலைப் பரப்பி, அதன் மேல் வாத்து முட்டைகளை அடுக்கி வைத்து, அவற்றின் மேல் உட்கார்ந்து அடை காத்தார். அவருடைய அப்பா கூப்பிட்டதற்குக் குஞ்சு பொறிக்கும் வரை நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார்.
விவேகானந்தரைப்போல புத்தகத்தை விரைவிலேயே படித்து முடித்து விடுவார். எடிசன் தன்னுடைய 11 வயதிற்குள், உலக அரசியல், வரலாறு, விஞ்ஞானம், ரசாயனம் போன்றவற்றை எல்லாம் படித்து முடித்துவிட்டார்.
ஒரு குறிப்பிட்ட ஆய்வில் 50,000 முறை தோல்விகளைச் சந்தித்தார். ஆனாலும் தொடர்ந்து ஆய்வு செய்து வெற்றி அடைந்தார். காரைக் கண்டுபிடித்த ஹென்றி போர்டின் வழிகாட்டி எடிசன்தான். போர்டு புதிதாக ஏதாவது கார் செய்தால், முதல் காரை எடிசனுக்குத்தான் கொடுப்பார். அந்த அளவுக்கு நட்பு, குருபக்தி.
எடிசனுக்குக் காது கேட்காத நிலைமை ஏற்பட்டது. காது கேளாத எடிசன் தொலைபேசிக் கருவியின் கார்பன் ட்ரான்ஸ்மீட்டரைக் கண்டுபிடித்தார். ஒலிக்கருவியின் ஒலியைக் கேட்க முடியாததால் அதிர்வைப் பல்லால் கடித்துப் பார்த்து உணர்ந்திருக்கிறார். முறையாகக் கல்வி பயிலாத எடிசன் முறையாகக் கல்விபயின்ற நமக்கு உதவும் பல கருவிகளைக் கண்டு பிடித்தார். எல்லா நேரங்களிலும் எந்த இடத்திலும் நமக்கு ஒளியைத்தந்து உதவியது எடிசன் அவர்களே.
நாம் குடியிருக்கும் வீடுகளுக்கு உபயோகிக்கும் கான்கிரீட் கலவை எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. சினிமாவைக் கண்டு பிடிப்பதற்கு மூல காரணமே எடிசன்தான். முதலில் ஊமை படங்கள் பிறகு பேசும் படங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். ஆனால் பேசும் படங்களில் உள்ள இசை, ஓசை, வசனங்கள் இவற்றை எடிசனால் கேட்க முடியாது.
எடிசனுக்கு ஞாபகமறதி அதிகம். அதை அ.ஈ.ந. என்று மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். கவனக் குறைவுத்தன்மை (அற்ற்ங்ய்ற்ண்ர்ய் ஈங்ச்ண்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீஹ் நஹ்ய்க்ழ்ர்ம்ங்) என்ற நோயாகக் கருதப்படுகிறது. இப்போது இந்த மாதிரி நோய்க்குப் பெரிய அளவில் சிகிச்சை செய்கிறார்கள். நல்ல பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்படி ஞாபக மறதி உள்ள எடிசன் தன்னுடைய பெயரைக்கூட சில சமயம் மறந்துவிடுவார்.
ஒருமுறை வரி செலுத்துவதற்கு குறிப்பிட்ட அலுவலகத்திற்கு எடிசன் சென்றிருக்கிறார். அலுவலக அதிகாரி உன்னுடைய பெயர் என்ன என்று எடிசனைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். எடிசனுக்குத் தன்னுடைய பெயர் மறந்து விட்டது. நினைவுக்கு வரவில்லை. ஒன்றுமே புரியாமல் வரிசையில் நின்று கொண்டிருந்த எடிசனைப் பார்த்து அவருக்குத் தெரிந்த ஒருவர், "என்ன, எடிசன் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். அந்த நண்பர் இவருடைய பெயரைச் சொன்னவுடன்தான் இவருக்குத் தன்னுடைய பெயர் நினைவிற்கு வந்தது.
காது கேளாமை பலருக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். எடிசனுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் அவருக்கு காது கேளாமைதான். ஏனெனில் எவ்வளவு சத்தத்திலும் அவரால் நிம்மதியாக தூங்க முடியும், வேலை பார்க்க முடியும். உடலில் எந்த விதக் குறையும் இல்லாமல் பிறந்தவர்கள் மற்றும் ஒரு சில குறைகளோடு பிறந்தவர்கள் அனைவரும் தாமஸ் ஆல்வா எடிசனை நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருமுறை ஏலத்தில் பழைய புத்தகங்களை நிறைய எடுத்தார் எடிசன். அவற்றைத் தலையில் ஒரு மூட்டையாக கட்டிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர், அவரைத் திருடன் என்று நினைத்து, நிற்கச் சொல்லி விசிலடித்தார். அவருக்கு காது கேளாததால், நிற்கவில்லை. தொடர்ந்து நடந்த அவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார். நல்லவேளை, இன்னும் கொஞ்ச தூரம் நடந்திருந்தால், அவரைச் சுட்டிருப்பார்கள்.
மனித குலம் நன்றி சொல்வதாக இருந்தால் ஒவ்வொருவர் வீட்டிலும் எடிசனின் படம் இருக்க வேண்டும். 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடிசனின் உடல் நிலை மோசமானது. அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் சுயநினைவை இழந்தார். பிறகு சில தினங்கள் கோமாவில் இருந்தார்.
தான் கண்டுபிடித்த போனோகிராப் கருவி, மரணத் தருவாயில் இருப்பவருடைய குரலைப் பதிவு செய்து வைக்கப் பயன்படும் என்று சொன்னார் எடிசன். அவர் கோமாவில் மரணம் அடைந்ததால் அவருடைய குரலைப் பதிவு செய்ய முடியவில்லை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...