

இந்திய ஆட்சிப் பணித் தேர்வை நம் தாய்மொழியான தமிழில் எழுதும்போது நமது எண்ணங்களை பொருள் மாறாமல் சொல்வது எளிதாக இருக்கும்'' என்கிறார் இத்தேர்வில் இந்திய அளவில் 238 ஆவது இடமும், தமிழக அளவில் 6 ஆவது இடமும் பெற்றவரான லட்சுமணப் பெருமாள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. ஓய்வுபெற்ற மில் தொழிலாளியான இவர், தற்போது பத்திர எழுத்தராக உள்ளார். இவரது மனைவி பார்வதி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் வரி வசூலராகப் பணியாற்றுகிறார். இவர்களது இரட்டைக் குழந்தைகள் லட்சுமணப் பெருமாள் மற்றும் கோமதி கௌசல்யா.இவர்களில் லட்சுமணப் பெருமாள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 238 ஆவது இடத்தையும், தமிழகத்தில் 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
""நான் அரசு உதவிபெறும் பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் தான் படித்தேன். 2008-இல் பிளஸ் 2 முடித்தபிறகு, தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பொறியியல் முதலாண்டு படிப்பையும், அடுத்த மூன்றாண்டு படிப்பை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியிலும் முடித்தேன்.
தொடர்ந்து வளாகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று டி.சி.எஸ். நிறுவனத்தில் 2015 இல் பணியில் சேர்ந்தேன். ஓராண்டுக்குப் பிறகு இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதுவதற்காக பணியிலிருந்து விலகினேன். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வில் வென்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தில் பணியில் சேர்ந்தேன். எனினும், இந்திய ஆட்சிப் பணி மீதிருந்த ஆர்வத்தால் அந்தப் பணியிலிருந்தும் விலகி முழு நேரமாக தேர்வுக்குத் தயாரானேன்.
2015-இல் முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்தேன். 2016 தேர்வில் நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வியடைந்தேன். 2017-இல் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2018 ஏப்ரலில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் இந்திய அளவில் 238 ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன்.
பள்ளிப் படிப்பை தமிழ் வழியிலேயே படித்த எனக்கு, தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுண்டு. அதனால், இந்திய ஆட்சிப் பணி தேர்விலும், தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக தேர்வு செய்ததோடு, தமிழிலேயே தேர்வும் எழுதினேன். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை தாய்மொழியில் எழுதும்போது, நமது எண்ணங்களை பொருள் மாறாமல் எடுத்துக் கூற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம்.
நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொள்வதோடு, எத்தனை முறை தோல்வி ஏற்பட்டாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி என்றும் நம்மை விட்டுச் செல்லாது.
சிறுவயது முதலே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்திய ஆட்சிப் பணியில் சேர என்னை ஊக்குவித்ததோடு, அதற்கான உதவிகளையும்
செய்தனர்'' என்றார் லட்சுமணப் பெருமாள்.
அவரது தாய் பார்வதி அம்மாள் கூறுகையில், ""சிறு வயதிலிருந்தே ஆட்சியராக வரவேண்டும் என்பது லட்சுமணனின் குறிக்கோளாக இருந்தது'' என்றார். தந்தை ரவி கூறும்போது, ""சிறுவயதிலேயே லட்சுமணப் பெருமாளுக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. தமிழ் இலக்கியங்களையும், அண்ணா, மு.வ. ஆகியோரது எழுத்துக்களையும் விரும்பிப்
படிப்பான்'' என்றார்.
சகோதரி கோமதி கௌசல்யா கூறுகையில், ""சிறுவயதிலேயே நான் வங்கிப் பணியில் சேருவது என்றும், எனது அண்ணன் இந்திய ஆட்சிப் பணியில் சேருவது என்றும் முடிவெடுத்து அதன்படி உழைத்து வந்தோம். நான் இப்போது வங்கியில் உதவி மேலாளராக உள்ளேன். எனது அண்ணனும் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வாகி விட்டார். இயல்பிலேயே அவரிடமுள்ள அமைதியான குணம், உதவும் குணம், தீர்க்கமான எண்ணம், நேர்மறை எண்ணங்கள் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.