விண்வெளிக்குச் செல்ல வேண்டும் அல்லது விண்வெளி ஆய்வில் இடம் பெற வேண்டும் என்பது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயர்ந்த லட்சியமாக இருக்கும்.
இந்த லட்சியப் பாதையை அடைவதற்குள் பல மாணவர்களின் வாழ்க்கைப் பாதை மாறிவிடும். ஆனால் அவர்களின் வாழ்வில் விண்வெளி, கனவு உலகமாகவே தொடரும்.
கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களைத்தாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் ராக்கெட்டின் மூலமாக விண்ணில் செலுத்தியுள்ளன.
இதுவரை இந்திய மாணவர்கள் உருவாக்கிய 6 செயற்கைக்கோள்களை இஸ்ரோவும், இரண்டு செயற்கைக்கோள்களை நாசாவும் ஏவி உள்ளன.
தற்போது, கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைக் கோளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரோவின் பங்களிப்புடன் அந்த மாணவர்கள் செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோளை உருவாக்குவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.
நாட்டின் 75-ஆவது சுதந்திரதினம் அடுத்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. அப்போது மாணவர்கள் உருவாக்கிய 75 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மல்லேஸ்வரம் அரசு பள்ளி மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் மேலும் சில அரசு பள்ளி மாணவர்களும் இணைந்து செயற்கைக்கோள்களைத் உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள் என்று கர்நாடக துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தெரிவித்தார்.
பள்ளிப் படிப்பின்போது விண்வெளி தொடர்பான பாடங்களைப் படித்த காலம் மாறி, விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ள மாணவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.