
மூன்றாண்டுகளுக்கு முன் தனக்கென்று கௌரவமான வேலையொன்றைத் தேடிக் கொள்ள விரும்பிய மும்பையைச் சேர்ந்த திருநங்கை ஜோயா தாமஸ் லோபோ(27) போட்டோகிராபி துறையைத் தேர்ந்தெடுத்தார்.
தனியார் யூடியூப் சேனல்களுக்கு புகைப்படம் எடுத்து தருவதோடு ஆவணப் படங்களையும் தொகுத்தளிக்கத் தொடங்கியவர், நாளடைவில் ப்ரீலான்ஸ் போட்டோகிராபர் அந்தஸ்து கிடைத்ததோடு, முதல் திருநங்கை போட்டோ ஜர்னலிஸ்ட் என்ற சிறப்பையும் பெற்றார்.
""ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே 11 வயதில் மற்ற மாணவர்களிலிருந்து நான் வித்தியாசப்படுவதை உணர்ந்து படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. சிலகாலம் மும்பை மின் ரயில்களில் பிச்சையெடுக்கத் தொடங்கினேன்.
அப்போதுதான் திருநங்கைகள் பற்றிய திரைப்படமொன்றை பார்க்க நேர்ந்தது. அப்படத்தின் இயக்குநர் விகாஸ் மகாஜனை சந்தித்து படத்திலுள்ள சில தவறுகளை எடுத்துக்கூறினேன். அப்படத்தின் தொடர்ச்சியாக நடிக்க உனக்கு விருப்பமா? என்று கேட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். அப்படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்கான விருதும் கிடைத்தது.
அந்த விருது வழங்கும் விழாவில் என்னை அழைத்த இயக்குநர், மேடையில் என்னுடைய அனுபவங்களை எடுத்துச் சொல்லும்படி கூறினார். அந்த விழாவில்தான் உள்ளூர் யூடியூப் சேனல் இயக்குநர் ஸ்ரீநாத் சிங் என்பவரைச் சந்தித்தேன். அவர்தான் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று புகைப்படமெடுக்கும் கலையை கற்றுக் கொடுத்து போட்டோ ஜர்னலிஸ்ட் பயிற்சியளித்தார். என்னுடைய படங்களும், ஊரடங்கு காலத்தில் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பற்றிய கட்டுரையும் கனடா நாட்டு பத்திரிகையொன்றில் வெளியாகி பாராட்டினைப் பெற்றது. தொடர்ந்து பிரபல பத்திரிகைகளில் நான் எடுத்தனுப்பும் படங்கள் இடம் பெற்றன. போட்டோ ஜர்னலிஸ்ட் என்ற பெயர் கிடைத்தாலும் நிரந்தரமாக வேலை தர யாரும் முன்வரவில்லை.
என்னுடைய பணியை பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்போன்றவர்களை பார்த்து ஏதாவது வேலை பார்ப்பதற்கு என்வென்று பலரும் கேட்டனர். "எங்களுக்குள் இருக்கும் திறமையை வைத்து படித்து முன்னேறும் போது வேலை கொடுக்க தயங்குகிறார்கள். பிறகு எப்படித்தான் நாங்கள் வாழமுடியும்' என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் ஜோயா தாமஸ் லோபோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.