நாடுகள் அறிவோம்... பிப்பைன்ஸ்
தீவுக்கூட்டங்கள்தான் பிலிப்பைன்ஸ். 7,100-க்கும் மேற்பட்ட தீவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. தென்கிழக்கு ஆசியாவில், தென்சீனக் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் தீவு


தீவுக்கூட்டங்கள்தான் பிலிப்பைன்ஸ். 7,100-க்கும் மேற்பட்ட தீவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. தென்கிழக்கு ஆசியாவில், தென்சீனக் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் தீவுகளில் லூசான் மற்றும் மிண்டாநாவே ஆகியவைதான் அளவில் பெரியவை. நாட்டின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு இந்த இரு தீவுகளில் அடங்கும். 7,100 தீவுகளில் மூன்றில் ஒரு பகுதியில்தான் மக்கள் வசிக்கின்றனர். மற்றவை மக்களையே பார்த்திராத மிகவும் குட்டியான தீவுகள்.
விதவிதமான பூச்செடிகள், நூற்றுக்கணக்கான வகைகளில் இங்கு வளர்கின்றன. அத்தனையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும். வசிப்பிடங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால் காடுகளில் மரங்களுக்குப் பதிலாக உயரமான புற்கள் வளர்ந்து எங்கும் நிறைந்துள்ளன.
200-க்கும் மேற்பட் உயிரினங்கள் இங்குள்ளன. குரங்குகள், அணில்கள், லெமூர்கள், எலிகள், கீரிகள், காட்டுப் பூனைகள், மான்கள் என்று விதவிதமான விலங்கு வகைகளை இங்கு காணலாம். "பின்டூராங்' என்று அழைக்கப்படும் ஆசிய கரடிப் பூனைகள் ஒருகாலத்தில் இங்கு ஏராளமாக இருந்தன. இப்போதோ இந்த விலங்குகள் அரிதாகி வருகின்றன. இதே போல "தமராவ்' என்றழைக்கப்படும் நீர் எருமையும் அரிய வகை விலங்கினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
மயில், புறா, கிளி, மீன்கொத்தி, சூரியப் பறவை, வால் பறவை, தூக்கணாங்குருவி மற்றும் ஹார்ன் பில் என்ற அரிய வகைப் பறவைகளும் இங்கும் அதிகம். பிலிப்பைன் பருந்து - இது குரங்குகளை உணவாக உட்கொள்ளும் - இதுவும் இப்போது அரிதாகி வருகின்றது.
1521-ம் ஆண்டு பெர்டினாண்ட் மெக்கல்லன் இத்தீவுகளில் முதன்முதலாகக் காலடி பதித்தார். அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராதலால், அப்போதிருந்த ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் பெயரை இந்தத் தீவுகளுக்குச் சூட்டி பிலிப்பைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்க நாடாக பிலிப்பைன்ஸ் இருந்தது.
அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தின் முடிவில், 1898-ல் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் பிடியில் வந்தது. 1935-ம் ஆண்டு சுயாட்சி பெற்றது. இருந்த போதும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்ததால், நாட்டின் சுதந்திரம் தள்ளிப் போனது.
1944-45-ல், அமெரிக்கா, ஜப்பானின் பிடியிலிருந்து பிலிப்பைன்ûஸ விடுவித்தது. 1946-ல் முழு சுதந்திரம் பெற்று, அமெரிக்க வழி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.
1965-ல் பெர்டினான்ட் மார்கோஸ் குடியரசுத் தலைவர் பதவியேற்றார். 1972-ல் அவர், ராணுவ அடக்குமுறைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். 1981-வரை இந்த அடக்குமுறை நீடித்தது.
20 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு 1986-ல் மார்கோஸ் நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். கோரசான் அகினோ குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு ஆட்சி முறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்கும் ராணுவத்துக்கும் தலைவர். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கபடுகிறார்.
"பிலிப்பினேஸ்' என்றழைக்கப்படும் இந்நாட்டு மக்கள், மலேசிய பாரம்பரிய வழி வந்தவர்கள். சீனர்கள், அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாட்டவர் என்று கலப்பு இன மக்களும் உள்ளனர். ஏராளமான மக்கள் ஸ்பெயின் நாட்டில் வழங்கப்படும் பெயர்களையே இன்று வரை தங்களுக்குச் சூட்டிக் கொள்கிறார்கள்.
இங்கு குழந்தைகளின் ஏழாவது வயதில்தான் ஆரம்பக் கல்வி ஆரம்பமாகின்றது. ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்வி; 13-வது வயதில் ஆரம்பிக்கும் உயர்கல்வி 4 ஆண்டுகள் நீடிக்கும்; அதன் பிறகு 4 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு.
விவசாயம் மற்றும் சிறு தொழில்கள்தான் பிலிப்பைன்ஸின் பொருளாதார ஆதாரங்கள். வாழைப்பழம், அரிசி, தேங்காய், சோளம், மீன், மாம்பழம், அன்னாசிப்பழம், கரும்பு, பன்றி மற்றும் மாட்டிறைச்சி நாட்டின் உற்பத்தியில் பெரும்பகுதியை வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...