மகாசக்தி சாமுண்டீஸ்வரி

சூரிலிருந்து 13வது கி.மீ. தொலைவில் சாமுண்டி குன்று உள்ளது. சாமுண்டீஸ்வரி குடிகொண்டுள்ள இடம் இது. மலையின் மீது கோயில் அமைந்துள்ளதால் 1000 படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும்.
Updated on
2 min read

சூரிலிருந்து 13வது கி.மீ. தொலைவில் சாமுண்டி குன்று உள்ளது. சாமுண்டீஸ்வரி குடிகொண்டுள்ள இடம் இது. மலையின் மீது கோயில் அமைந்துள்ளதால் 1000 படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும்.

இந்த மலையின் உயரம் 3489 அடி. வழியில் பாதி தொலைவில் அழகிய நந்தியைக் காணலாம். கருங்கல்லால் ஆன இது எண்ணெய் மெழுகியும், பல அபிஷேக தீர்த்தங்கள் ஊற்றியும் இன்று முழு  கறுப்பாக மாறிவிட்டது. 16 அடி உயரம் கொண்ட கம்பீர நந்தியை 1659ஆம் ஆண்டு மைசூர் மகாராஜ கொட்ட தேவராஜ உடையார் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்கந்த புராணம் உட்பட சில புராணங்கள் இந்த இடத்தை "திரிமுட க்ஷேத்திரம்'

என வர்ணிக்கின்றன. சுற்றி எட்டு மலைகள் உள்ளன. மேற்குப் புறத்தில் உள்ள மலை சாமுண்டி.

இந்தப் பகுதியில் மிகப் பழைய மகாபலேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இதனால் இந்த மலையை மகாபலாத்ரி எனவும் அழைக்கின்றர்.

தேவி சாமுண்டீஸ்வரி நினைவாகவே இது "சாமுண்டி மலை' என அழைக்கப்படுகிறது. தசரா நேரத்தில் அரண்மனை உட்பட மைசூர் முழுவதும் அலங்கார விளக்குகள் போட்டு ஜொலிக்கும். அதனை  இந்த மலையின் மீதிருந்து பார்த்தோமானால், "ஆஹா... தேவர் உலகமோ' என வியக்க வைக்கும். சாமுண்டி ஆதிசக்தியாக வணங்கப்படுகிறார். அவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்றுமே ஒன்றான  "மகாபிரம்மம்' "மகாசக்தி' என மக்கள் நம்புகின்றனர்.

சாமுண்டி கோயிலுக்கு இடது புறம் மகிஷாசுரனை காணலாம். 3.5 மீட்டர் உயரத்தில், வலது கையில் கத்தியுடனும், இடது கையில் பாம்புடனும் ஆக்ரோஷமாய் இருக்கிறான்.

சாமுண்டி கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது. முதலில் சின்ன கோயிலாக இருந்து 1399ல் மைசூர் உடையார் ஆட்சி வந்ததும், பெரிதாக்கப்பட்ட கோயில். மைசூர் மன்னர்களின்  குலதெய்வம் சாமுண்டேஸ்வரி.

ஹோய்சாள - விஜயநகர - மைசூர் மன்னர்களும் இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளனர். கோயிலின் ஏழு அடுக்கு கோபுரம் நம்மை கம்பீரமாய் வரவேற்கிறது.

உச்சியில் தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ உடையார் 1827ல் இந்த ராஜகோபுரத்தைக் கட்டினார். சிம்ம வாகனம் உட்பட ஏராளமான வாகனங்களையும், நகைகளையும் கோயிலுக்காக  மன்னரே செய்துகொடுத்துள்ளார்.

வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்ட கதவு...! கதவில் கணபதியை தரிசிக்கலாம். வெள்ளிக் கவசத்திலேயே அம்மனின் பல வடிவங்களையும் தரிசிக்கலாம். துவாரபாலர்களைக் கடந்து உள்ளே சென்றால்  வலது புறம் கணபதியை தரிசிக்கலாம்.

கொடிமரம், சாமுண்டியின் காலடிகள். பார்த்து வணங்கப்பட வேண்டியவை. அம்மனின் வாசல் கதவை ஒட்டி திக்பாலகிகளான நந்தினியும், கமலினியும் நம்மை வரவேற்கிறார்கள்.

அம்மன் அழகுக்கு அழகாகத் திகழ்கிறாள். கோயிலில் நுழைந்ததும் முதலில் நவரங்க அரங்கம், அடுத்து அந்தர்கலா மண்டபம், மூன்றாவதாக கர்ப்பகிரகம். சுற்றி பிராகாரமும் உண்டு. வழியில்  ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சாமுண்டி அன்னை மகிஷாசுரனை வென்றவள். சிங்கத்தின் மீது அமர்ந்து உக்கிரமாய் வந்து மகிஷாசுரனை வதம் செய்தாள். இதே பாணியில் கர்ப்ப கிரகத்தில் அம்மனை  காணலாம்.

அன்னையின் கீழ் இந்த மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திருசூலத்தால் அன்னை இவனை குத்தியபடி காட்சியளிக்கிறாள். தங்கக்  கவசத்தில் அன்னை மேலும் ஜொலிக்கிறாள்.

அம்மனுக்கு தினம் ஒரு அலங்காரம். ஆடி வெள்ளிக் கிழமைகளில் சாமுண்டியை தரிசிக்க அதிகாலை இரண்டரை மணியிலிருந்தே பக்தர்கள் ஸ்லோகங்களை உச்சரித்தபடி மலை ஏற  ஆரம்பித்துவிடுகின்றனர். அஸ்வதயுஜ பூர்ணிமாவின்போது இங்கு ரதோற்ஸவம் சிறப்பாக நடக்கிறது. வருடாந்திர தெப்ப உற்ஸவமும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com