அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 70 ஆயிரம் சுட்டுரைக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, கடந்த புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர்.
அதனைத் தொடர்ந்து வன்முறையைத் தூண்டுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவலை தொடர்ச்சியாகப் பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. சுட்டுரை நிறுவனம் அமெரிக்க அதிபரின் தனிக்கணக்கை நிரந்தரமாக நீக்கியது.
அதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக சுட்டுரையில் பதிவிட்ட கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 70 ஆயிரம் சுட்டுரைக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.