'உக்ரைன் தனித்துப் போரிடுகிறது; உதவி கேட்டும் உலக நாடுகள் முன்வரவில்லை' - அதிபர் ஸெலென்ஸ்கி வேதனை

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டதாகவும் உதவி கேட்டும் எந்த உலக நாடுகளும் உதவவில்லை என்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். 
'உக்ரைன் தனித்துப் போரிடுகிறது; உதவி கேட்டும் உலக நாடுகள் முன்வரவில்லை' - அதிபர் ஸெலென்ஸ்கி வேதனை

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டதாகவும் உதவி கேட்டும் எந்த உலக நாடுகளும் உதவவில்லை என்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது. 

அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. நேற்று தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் முன்னேறியுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்தவும் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வியாழக்கிழமை இரவு மக்களிடம் உரையாற்றினார். அப்போது உக்ரைன் நாடு தனித்து விடப்பட்டு விட்டதாகவும் உக்ரைனுக்கு உதவ யாரும் தயாராக இல்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். 

அவர் பேசியதாவது: 

'ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு உதவ எந்த நாடுகளும் இல்லை. 

ரஷிய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டு விட்டது. உக்ரைனுடன் சேர்ந்து ரஷியாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்றால் யாரும் இல்லை என்பதுதான் பதில். 

இதுவரை நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை. நேரடியாக பல நாட்டின் தலைவர்களையே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். யாரிடமும் பதில் இல்லை. அவர்கள் ரஷியாவுக்கு அஞ்சுகிறார்கள். ஆனால் உக்ரைன் எதற்கும் அஞ்சவில்லை; ரஷியாவிற்கு அஞ்சவில்லை. 

எங்களுடன் போரிட யார் தயாராக இருக்கிறார்கள்? யாரும் இல்லை. 

நேட்டோவில் உக்ரைன் இணையத் தயாராக இருந்தது. இப்போது நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள்?

நேட்டோ அமைப்பில் இந்த நிமிடம் வரை உக்ரைன் உறுப்பினர் இல்லை. அந்த அமைப்பினர் இதுவரை உதவவில்லை. அவர்கள், உக்ரைன் மக்களுக்கு என்ன உத்தரவாதம் தர முடியும்? 

நேட்டோவில் இணைப்பதாக கூறிய நாடுகள் அனைத்தும் இன்று அச்சத்தில் இருக்கின்றன. 

ரஷிய படைகள் முதலில் என்னையும் என் குடும்பத்தையும் குறிவைத்துள்ளன. நாங்கள் தலைநகர் கீவில்தான் இருக்கிறோம்' என்று உருக்கமாக பேசியுள்ளார், 

மேலும், 'ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 316 பேர் காயமடைந்துள்ளனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com