இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நாளை (ஜூலை 20) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.
இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நாளை அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.
இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர்.
நேற்று வேட்புமனுத்தாக்கல் முடிந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தனர்.
மொத்தம் 223 வாக்குகளில் 219 வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் என்றும், 4 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டது. செல்லுபடியான 219 வாக்குகளில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அழகம் பெரும 82 வாக்குகளையும், அனுர குமார 3 வாக்குகளையும் பெற்றனர்.
இலங்கை தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கரேந்திரன் ஆகிய இரண்டு பேர் மட்டும் வாக்களிப்பை புறக்கணித்தனர்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.