

ஊழல் வழக்குகளில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையிலிருந்து தப்ப, நாடு கடந்து லண்டனில் வசித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் இன்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த 2 நாள்களாக சவூதி அரேபியாவிலிருந்த அவா், துபையில் சிலரைச் சந்தித்துப் பேசிய நிலையில், துபையில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் பனாமா ஆவண முறைகேடு தொடா்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஊழல் வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக சிறையிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் சென்ற நவாஸ், ஜாமீன் காலாவதியான பிறகும் நாடு திரும்பாமல் அங்கேயே வசித்து வந்தார்.
பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் கடந்த 2022-ஆம் அகற்றப்பட்ட பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
ஷெரீஃப் மீதான அவென்ஃபீல்ட் மற்றும் அல்-அஜீஸியா ஊழல் வழக்குகளில் அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வரும் 24-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதையடுத்து, அவர் பாகிஸ்தான் திரும்பி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
நவாஸ் ஷெரீஃப் அவரது குடும்ப உறுப்பினர்கள், மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் நண்பர்களுடன் விமானம் மூலம் துபையில் இருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்றுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.