ஹமாஸின் விமானப்படைத் தலைவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காஸாவிலிருந்து ஹமாஸ் குழுவினா், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினா். நிலம், கடல், வான் வழியாக இஸ்ரேலுக்குள் 22 இடங்களில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு மின்சாரம், இணைய சேவை ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. காஸாவில் மக்கள் வெளியேறவும் காலக்கெடு விதித்துள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா உருக்குலைந்துள்ளது.
இதையும் படிக்க | ஹமாஸிடம் 120 பிணைக் கைதிகள்: இஸ்ரேல் தகவல்
அதேநேரத்தில் இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என 120 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினரிடம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஹமாஸ் படையின் தலைமை அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அந்த தாக்குதலில் ஹமாஸ் குழுவின் விமானப் படைத் தலைவர் முராத் அபு முராத், கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த அக். 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முராத் முக்கிய காரணம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.