காஸாவின் மற்றொரு மிகப்பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து காஸா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
இதையும் படிக்க | காஸாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை: இஸ்ரேல்
ஏற்கெனவே காஸாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது மற்றொரு மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வடக்கு காஸாவில் உள்ள அல்-குவாத் மருத்துவமனையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேறுமாறு பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (ஆர்சிஎஸ்) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் சுமார் 400 நோயாளிகள் மற்றும் 12,000 பொதுமக்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த போரில் இதுவரை இரு தரப்பிலும் 5,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.