வியாட்நாம் நீதிமன்றம் பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ரோங் மி லானுக்கு வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
வியட்நாமின் முன்னணி நிறுவனமான ’வான் தின் பாட்’ தலைவர் 67 வயதான ட்ரோங் மி லான், அபகரிப்பு, ஊழல் மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபணமாகியுள்ளது. மரண தண்டனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞர் நீதிமன்றத்தை அணுக 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.
வியட்நாமின் முன்னணி வணிக வங்கியான எஸ்சிபி வங்கியைச் சட்டத்திற்கு விரோதமாக 2012 முதல் 2022 வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களுக்கு வங்கியின் மூலம் கடன் அளித்ததாகவும் 86 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து வந்ததாகவும் இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
கம்யூனிச நாடான வியட்நாமில் 2016 முதல் ஊழலுக்கெதிராக நடைபெற்றுவரும் நடவடிக்கைகளில் லான் தொடர்புடைய வழக்கு மிகப்பெரிய பண மோசடியாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டின் நிகர வருவாயான ஜிடிபியின் 3 சதவிகிதத்துக்கு நிகரான ஊழல் நடந்துள்ளது.
லான் உடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட 84 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை நீதிமன்றம் விதித்துள்ளது.
லானின் கணவர் ஹாங்காங் முதலீட்டாளர் எரிக் சு நப்-கீ குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். எஸ்சிபி வங்கியில் இருந்து போலியான நிறுவனங்களை அமைக்க உதவியுள்ளார். லானின் மருமகன் ட்ரோங் ஹுயு வானும் இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுபோன்ற பண மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது மிக அபூர்வமானது.