ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகத்தின் சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 20-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் உணரப்பட்டுள்ள நிலையில், இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டடங்களும், சாலைகளும் நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ள நிலையில், உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
இந்த நிலையில், ஜப்பானில் இருக்கும் இந்தியர்களின் உதவிக்காக இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுரைகளை கண்காணித்து நடக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.