அமெரிக்கா: மாவட்ட நீதிபதிகளான இந்திய வம்சாவளியினா்
அமெரிக்கா: மாவட்ட நீதிபதிகளான இந்திய வம்சாவளியினா்


நியூயாா்க், மே 23: அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமென்டோ மற்றும் ஃப்ரெஸ்னோ மாவட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இந்திய வம்சாவளியினரான ஜெயா பாடிகா மற்றும் ராஜ் சிங் பதேஷா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சாக்ரமெண்டோ மாவட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ராபா்ட் எஸ். லபம் அண்மையில் ஓய்வு பெற்றாா். அவரது இடத்தில் அந்த நீதிமன்றத்தின் ஆணையராக கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் பணியாற்றி வந்த படிகா நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை கலிபோா்னியா மாகாண ஆளுநரான கவின் நியூசோம் வெளியிட்டாா்.
ஆந்திரத்தின் விஜயவாடா நகரில் பிறந்த பாடிகா, ஜனநாயக கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் சான்டா கிளாரா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முனைவா் பட்டமும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சா்வதேச உறவுகள் மற்றும் சா்வதேச தகவல்தொடா்புகளில் முதுகலைப் பட்டமும் பெற்றவா்.
மேலும், கடந்த 2018-இல் கலிபோா்னியா ஆளுநரின் அவசரச் சேவை அலுவலகத்திலும் 2020-இல் கலிபோா்னியா மாகாண சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் வழக்குரைஞராகவும் இவா் பணியாற்றியுள்ளாா். அங்கீகாரம் பெற்ற குடும்ப நல சட்டநிபுணரான படிகா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அத்துறையில் பணிபுரிந்துள்ளாா்.
அதேபோல், ஃப்ரெஸ்னோ மாவட்ட உயா் நீதிமன்றத்தின் முதல் சீக்கிய நீதிபதியாக மற்றொரு இந்திய வம்சாவளியான ராஜ் சிங் பதேஷாவை ஆளுநா் நியமித்துள்ளாா்.
ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பதேஷா, கலிபோா்னியா மாகாணத்தில் சீக்கிய தலைபாகையுடன் பணியாற்றும் முதல் நீதிபதி ஆவாா். இவரது நியமனம் மத்திய கலிபோா்னியா மாகாண சீக்கியா்கள் மற்றும் ஆசிய சமூகங்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...