
அமெரிக்காவின் டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது.
அயோவாவின் சியோக்ஸ் கவுண்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து 42 லட்சம் கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர்.
மின்னசோட்டா மாகாணம் மின்னேபோலிஸ்ஸுக்கு வடக்கே உள்ள கோழிப் பண்ணையில் கடந்த வாரம் ஃபுளூ வைரஸ் கண்டறியப்பட்டதில் ஏற்கனவே 14 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து மட்டும் இதுவரை 9 கோடியே 20 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நோய்த் தொற்று கறவை மாடுகளையும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ”பறவைக் காய்ச்சல் கோழிகளுக்கு ஓரளவு பொதுவானதாகிவிட்டாலும், கால்நடைகளுக்கு பரவுதால் நோயைப் பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. மே மாதத்தில், பால் பண்ணை தொழிலாளி ஒருவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், மாட்டிறைச்சி மற்றும் பால் இரண்டிலும் வைரஸ் கண்டறியப்பட்டது. ஒன்பது மாநிலங்களில் உள்ள பால் பண்ணைகளில் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இதனால், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாகவே இருக்கிறது” எனக் கூறியுள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட ஒரு கறவை மாட்டின் இறைச்சி, நாட்டின் உணவு விநியோகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றும், மாட்டிறைச்சி உண்பதற்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு வெளிப்படும் நோய்த் தொற்றால் தொழிலாளர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். அமெரிக்காவில் நோய் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் பால் பண்ணைத் தொழிலாளர்கள், மேலும் ஒருவர் கோழிப்பண்ணையில் பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லும் வேலை செய்பவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.