பனி மூட்டம்: 7 விமான சேவைகள் பாதிப்பு
பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இந்தப் பனி மூட்டம் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதனிடையே, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என பல விமானங்கள் கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 4 விமானங்களும், பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், 7 விமானங்களின் சேவையும் பனி மூட்டம் காரணமாக பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகள் அவதியடைந்தனா்.
