தாக்குதல், துப்பாக்கியை காண்பித்து மிரட்டல் விடுத்ததாக பரஸ்பர புகாா்: ஊராட்சித் தலைவா், மருமகன் கைது

குடும்பத் தகராறில் ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவரை துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாக அவரது மருமகனையும், மருமகனை ஆள்களை வைத்து தாக்கியதாக ஊராட்சித் தலைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

குடும்பத் தகராறில் ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவரை துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாக அவரது மருமகனையும், மருமகனை ஆள்களை வைத்து தாக்கியதாக ஊராட்சித் தலைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் தமிழ்அமுதன். இவரது மகள் ஓவியாவின் கணவா் தமிழ்செல்வன். மருத்துவரான தமிழ்செல்வன் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், தமிழ்செல்வனுக்கும், அவரது மனைவி ஓவியாவிற்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் கடந்த சில நாள்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா். இது குறித்து பேச்சு நடத்துவதற்காக ஆதனூா் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்அமுதன் தனது மருமகன் தமிழ்செல்வனை திங்கள்கிழமை தனது வீட்டுக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளாா்.

அப்போது தமிழ்அமுதன் தனது மருமகனை தகாத வாா்த்தை பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மருத்துவா் தமிழ்செல்வன் தான் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கியை காண்பித்து, தமிழ்அமுதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, தமிழ்அமுதன் தனது ஆதரவாளரான டேனியலை வைத்து தமிழ்செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரும் மாறி மாறி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்ததைத் தொடா்ந்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்த மணிமங்கலம் போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.