மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 103 பயனாளிகளுக்கு 2 கோடியே 16 லட்சம் மதிப்பிலான ஆணைகளை அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி திங்கள்கிழமை வழங்கினார்.
கடந்த ஆண்டு ஜூன் 1 -ஆம் தேதி அன்று மத்திய அரசு 'அனைவருக்கும் வீடு -2022' என்னும் திட்டத்தை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக நகரங்களில் வாழும் ஏழைகள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினர் ஆகியோரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 2022 க்குள் அனைவருக்கும் வீடு, அதில் மின்வசதியும் தண்ணீர் வசதியும் இருக்கும், வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகிய வசதிகள் அமைந்திருக்கும் என்ற கவர்ச்சிகரமான உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தில் திருத்தணி நகராட்சியில் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருந்தனர். இந்நிலையில் திருத்தணி நகராட்சிக்குள்பட்ட 21- ஆவது வார்டில் உள்ள 103 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான திட்டத்திற்கான மத்திய அரசின் ஆணையை அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருத்தணி நகர் மன்ற முன்னாள் தலைவர் டி. சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர்கள், முனுசாமி, கேபிள் எம்.சுரேஷ், சுமதிபுஷ்பராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.