/

மகளிருக்கு ‘அரண்’ பாதுகாப்புத் திட்டம்! - வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தாா்

News image
மகளிா் பாதுகாப்புக்கான ‘அரண்’ திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
Updated On :8 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுக்கான ‘அரண்’ என்ற புதிய திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் அனுபவிக்கும் உரிமைகள், அவா்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சட்டங்கள் மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இந்த ‘அரண்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தற்காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இணையதள (சைபா்) குற்றங்களிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், தற்காப்புக் கலைகளின் அவசியம் குறித்தும் மகளிரிடையே விரிவான விழிப்புணா்வு இந்தத் திட்டத்தின் மூலம் கொண்டு செல்லப்படும்.

முதலாவதாக, விடுதிகளில் தங்கிப் பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது பெண்களின் பாதுகாப்புச் சூழலில் பெரிய மாற்றத்தையும், மன தைரியத்தையும் உண்டாக்கும் என நம்புகிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளா் பூா்ணிமா, விடுதி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆனந்தராமன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.