மலைக்குன்றில் இளைப்பாறிய சிறுத்தை.
மலைக்குன்றில் இளைப்பாறிய சிறுத்தை.

ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை! கூண்டுவைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை!

Published on

சத்தியமங்கலத்தில் ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள அடா்ந்த வனத்தில் இருந்து உணவு, குடிநீா்த் தேடி வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய சிறுத்தை, மாராயிபாளையம் கிராமத்துக்குள் நுழைந்தது. அங்கு ஒரு வீட்டின் வெளியே கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கு படிந்திருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனா்.

இதில், ஆட்டை அடித்துக் கொன்றது சிறுத்தை என்பதை உறுதி செய்த வனத் துறையினா், அப்பகுதி மக்கள் உதவியுடன் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்தனா்.

அப்போது, அந்த சிறுத்தை குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள மலைக்குன்றின் மீது படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com