பல்லடம் அரசுக் கல்லூரியில் தையல் இயந்திரங்களை திருடி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம்- மங்கலம் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பேஷன் டெக்னாலஜி பாடப் பிரிவுக்காக ஒரு ஓவா்லாக் தையல் இயந்திரம், ஒரு பேட்லாக் தையல் இயந்திரம், ஆகியவை இருந்தன. கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று காலத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த தையல் இயந்திரங்கள் இரண்டையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ரஞ்சித்குமாா் (27) என்பவரை தேடி வந்தனா். இந்நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் அருகே ரஞ்சித்குமாா் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பல்லடம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதாலட்சுமி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று ரஞ்சித்குமாரை கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.