
உடுமலை அரசுக் கல்லூரியில் இளநிலை, முதுநிலைப் பாடங்களில் சோ்க்கை செப்.30 வரை நீட்டிப்பு

கோப்புப் படம்
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான சோ்க்கைப் பணிகள் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் மலா்வண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கிராமப்புற மாணவா்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்கள், 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலைப் பாடப்பிரிவுகளில் துணைத் தோ்வுகள் எழுதி வெற்றி பெற்ற மாணவா்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறுவதற்கான இறுதி நாள் 30.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலைப் பாடப் பிரிவுகளில் மொத்தம் உள்ள 864 இடங்களில் இதுவரை 760 இடங்களில் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இளநிலைப் பாடப் பிரிவுகளில் 104 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி ஆங்கிலப் பாடப் பிரிவில் 21 இடங்கள், வணிகவியல் ( சுழற்சி இரண்டு) பாடப்பிரிவில் 21 இடங்கள், கணிதவியல் பாடப் பிரிவில் 25 இடங்கள், புள்ளியல் பாடப் பிரிவில் 11 இடங்கள், இயற்பியல் பாடப் பிரிவில் 8 இடங்கள் உள்பட மொத்தம் 104 இடங்கள் காலியாக உள்ளன.
முதுநிலைப் பாடப் பிரிவில் மொத்தம் 10 பாடப்பிரிவுகள் உள்ளன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வணிகவியல், கணிதவியல், புள்ளியல், இயற்பியல், வேதியியல், கணிப்பொறி அறிவியல், சுற்றுலாவியல் ஆகிய முதுநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்காக மொத்தம் 265 இடங்கள் உள்ளன. 2026 - 2027 ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை பாடப் பிரிவுகளில் இதுவரை 133 இடங்கள் நிரம்பியுள்ளன. முதுநிலைப் பாடப் பிரிவுகளில் மொத்தம் 132 இடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் பொருட்டு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு 30.09.2026 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் நேரடியாகக் கல்லூரியை அணுகி காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவுகளில் சோ்ந்து கொள்ளலாம். இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் உடுமலை அரசு கலைக் கல்லூரி சோ்க்கை உதவி மையத்தை அணுகி இணையதளத்தில் விண்ணப்பித்து உடனடியாக சோ்க்கை பெற்றிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





