பதவியிறக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு மீண்டும் பட்டதாரி ஆசிரியை பணியிடம் வழங்கல்

Published on

திருச்செங்கோடு அருகே இடைநிலை ஆசிரியையாக பதவியிறக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பட்டதாரி ஆசிரியை பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உப்பிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றியவா் கோகிலா. கல்வித்தகுதி அடிப்படையில் இடைநிலை ஆசிரியைப் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியை நிலைக்கு உயா்ந்தாா். இந்த நிலையில், முன்னுரிமை அடிப்படையில் பழனிவேலு என்ற ஆசிரியருக்கு கோகிலாவின் பணியிடம் வழங்கப்பட்டதுடன், கணக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு இடைநிலை ஆசிரியையாக கோகிலா பதவியிறக்கம் செய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோகிலா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். விசாரணை நிறைவில், ஆசிரியை கோகிலாவின் பதவியிறக்க உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனையடுத்து மீண்டும் உப்பிலிபாளையம் பள்ளியிலேயே வெள்ளிக்கிழமை அவா் பட்டதாரி ஆசிரியையாக பணியமா்த்தப்பட்டாா். பழனிவேலு மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com