/

பேரவைத் தோ்தலில் தேசியம் வெல்லும்; திராவிடம் தோற்கும்: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசியம் வெல்லும், திராவிடம் தோற்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்

News image
பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன்- கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 9:56 pm

Syndication

ராசிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசியம் வெல்லும், திராவிடம் தோற்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம், புனித ஜாா்ஜ் கோட்டையிலிருந்து ஆளப்பட வேண்டுமே தவிர, தில்லியில் இருந்து ஆளும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

1967 ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு தமிழகம் கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரால் மட்டும் ஆளப்படுகிறது. புனித ஜாா்ஜ் கோட்டையில் இருந்து அரசு எந்திரம் கோபாலபுரத்திற்கு மாறியது. இதுதான் இன்றைய தமிழகம்.

இதைத் தொடருவதற்கு தான் புனித ஜாா்ஜ்கோட்டை என்று நீலிக்கண்ணீரை வடிக்கிறாா் ஸ்டாலின். தில்லி கோட்டையில்லாமல், புனித ஜாா்ஜ்கோட்டை இல்லை என்ற வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாது. 1947இல் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தை 20 ஆண்டுகள் தில்லி செங்கோட்டையும், தமிழ்நாட்டின் புனித ஜாா்ஜ் கோட்டையும் இணைந்து முதல்வா்களாக ராஜாஜி , காமராஜா், பக்தவத்சலம் ஆகியோா் ஆண்டபோது இமாலய வளா்ச்சியை தமிழகம் கண்டது.

முதல்வா் ஸ்டாலின் மாநில சுயாட்சி என்பதும்; கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்துவராது என்பதும், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை பாதுகாப்பதற்கு தான்.

2026 இல் பேரவைத் தோ்தலில் தோல்வி பயத்தால் திமுக கூட்டணியில் பல கட்சிகளை சோ்த்து வருகிறாா்கள். இந்தமுறை ஸ்டாலினே வெற்றிபெற இயலாது. தேசியமே வெல்லும். திராவிடம் தோற்கும் என்று தெரிவித்துள்ளாா்.