மேட்டூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், பெரிசோரகை ஊராட்சியில் உள்ள பூமிரெட்டிபட்டியில், அருந்ததியா் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இலவச வீட்டுமனை கேட்டு கடந்த எட்டு ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்களது பழைய குடியிருப்புகளில் இருந்து பெட்டி, படுக்கைகள், மூட்டைகளுடன் மயானத்தில் குடியேற முயற்சித்தனா்.
மேட்டூா் டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மயானத்துக்கு முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் வட்டாட்சியா் முத்துராஜா, வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, குடியிருக்க தகுதியான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.