ராமநாதபுரம், ஜன. 3: மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் நகரிலும் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் அதிகளவில் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிகின்றன.
நகர் காவல்நிலையம் முதல் பாரதி நகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே செல்வது விபத்துக்களுக்கும் காரணமாகின்றன.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் ஆட்சியர்,டி.ஐ.ஜி. எஸ்.பி,அலுவலகங்கள்,சேதுபதி-சீதக்காதி விளையாட்டரங்கம்,அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன. உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன.
வியாழக்கிழமை காலையில் ஆட்சியர் அலுவலக வரவேற்பு அறைக்குள்(ஆவணக்காப்பக பிரிவு பகுதிக்குள்) பசுமாடுகள் நுழைந்து உள்ளே யாரும் போகமுடியாதபடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தன.
அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளும் கூட்டம், கூட்டமாகத் திரிகின்றன. பன்றிகள் தொடர் சாவின் காரணமாக அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டணம்காத்தான் ஊராட்சிமன்ற தலைவர் கவிதா கதிரேசன் கூறியதாவது: சுற்றித்திரியும் கால்நடைகளை மொத்தமாகப் பிடித்து எங்கே போய் கட்டிப்போடுவது என்று தெரியவில்லை. பன்றிகளையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜ்புர்ரகுமான் கூறியதாவது:
நகரில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு புதன்கிழமை தான் நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்.
விரைவில் அனைத்து கால்நடைகளையும் பிடித்து மாட்டுத் தொழுவத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிகளை அடிக்கடி பிடித்து திருச்சுழி, பார்த்திபனூர் பகுதிகளில் ஆள்நடமாட்டமில்லாத காடுகளில் மீண்டும் வந்து விடாதபடிகொண்டு போய் விட்டு விடுகிறோம் என்று ஆணையர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.