/

குழந்தைகள் பல் பாதுகாப்பு கருத்தரங்கம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் குழந்தைகள் பல் பாதுகாப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:36 am

DIN

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் குழந்தைகள் பல் பாதுகாப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் மருத்துவமனையின் பல் சிகிச்சைத்துறை தலைமை மருத்துவர் ஜிப்ரீல் ஓய்சுல் பங்கேற்று பேசும்போது, குழந்தைகள் பிறந்த 6 மாதத்தில் பற்கள் முளைக்கும். சில குழந்தைகள் பிறக்கும்போதே பற்கள் முளைத்த நிலையில் பிறக்கும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. குழந்தைகளுக்கு தினசரி இருமுறை பற்களை துலக்கி விட வேண்டும். இரவில் பால் குடிக்கும் குழந்தைக்கு சிறிதளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பற்சொத்தையை தடுக்க பற்களை நன்றாக துலக்கி உணவுப்பொருள்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கு பின்பு வாயை கொப்பளிக்க வேண்டும். சாக்லெட், ஐஸ்கிரீம், மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவில் சாக்லெட்டை வாயில் வைத்துக்கொண்டு உறங்கக்கூடாது.
புளோரைடு கலந்த பற்பசையை பயன்படுத்தினால் பற்சொத்தையை தடுக்கலாம். தினசரி இருவேளை பல்துலக்க வேண்டும்.பச்சைக் காய்கறிகள், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பற்களை துலக்கியப்பின்பு ஈறுகளை இதமாக அழுத்தி விடவேண்டும்.ஆண்டுக்கு இருமுறை தவறாமல் பல் மருத்துவரிடம் பற்களை பரிசோதனை செய்ய வேண்டும். முதுமையில் உடல்நலத்தை பேணிகாப்பது போல பற்களையும் காக்க வேண்டும். பற்களில் பாதிப்பு ஏற்பட்டால் உடல்நலமும் பாதிக்கும். உணவின் அளவும் குறையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.