மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோயிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலையானார். சென்னை வந்த சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார்.
இதனால், அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பல ஆதரவாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினர். பின்னர், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா பேசிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாவட்டம் தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போதெல்லாம் அங்கு உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
மதுரையில் சசிகலா சாமி தரிசனம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோயிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சாமி தரிசனம் செய்தார். சசிகலா இன்று காலை 8.30மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட நிலையில் மீனாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள மதுரை வீரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
மேலும் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் சசிகலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் காரில் இருந்தபடியே சசிகலா குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சாக்லேட்டுக்களை கொடுத்தார்.
பின்னர் மதுரை விமானநிலையம் சென்று அங்கிருந்து மதியம் 1 மணிக்கு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.