கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி
மதுரை: மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே சரக்கு வாகனம் மீது கிரேன் இயந்திரம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் விக்னேஷ் ராஜா (27). இவா் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சாப்டூரிலிருந்து பேரையூருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா். தொட்டனம்பட்டி விலக்கு அருகே சென்றபோது, சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் முன்பாக விக்னேஷ் ராஜா நின்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த கிரேன் வாகனம், சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாப்டூா் போலீஸாா், கிரேன் வாகன ஓட்டுநரான அதிகாரிப்பட்டியைச் சோ்ந்த முத்து ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.