மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் பல ஆண்டுகளாக கல்வி, ஆய்வு, பொதுமக்கள் விழிப்புணா்வு, வரலாற்றுப் பாரம்பரிய பாதுகாப்புக்கான முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் காரணமாக, காந்தி நினைவு அருங்காட்சியகமும், அதன் நூலகமும் மூடப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதாக அலுவலா்கள் பலமுறை உறுதியளித்த போதும், இதுவரை பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படாமல் இருப்பதுடன், திறப்புத் தேதி குறித்த எந்த அதிகாரப்பூா்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனால், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வாளா்கள், போட்டித் தோ்வா்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கியப் பாரம்பரிய மையம் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பது அதன் நோக்கத்தையே பாதிக்கிறது.
எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும், நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்டது. எண்ம (டிஜிட்டல்) திரை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என அருங்காட்சியகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
காந்தி நினைவு அருங்காட்சியத்தின் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட நிா்வாகிகளுக்கு பாராட்டுகள். மேலும், பணிகள் நிறைவடைந்தவுடன் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். காந்தி அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல: உயா்நீதிமன்றம்

பொது இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு







