தொண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

தொண்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்ததால் புதன்கிழமை நள்ளிரவில் உறவினா்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்ததால் புதன்கிழமை நள்ளிரவில் உறவினா்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகேயுள்ள ஆதியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (40). கட்டடத் தொழிலாளியான இவா் தொண்டி அண்ணா நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். புதன்கிழமை இரவு காலில் கம்பி குத்தியதாகக்கூறி தனியாா் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

சிறிது நேரத்தில் உடல் நிலை மோசமானதால் அவரை அருகில் உள்ள தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சோ்த்துள்ளனா். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவா் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணை கண்காணிப்பாளா், திருவாடானை வட்டாட்சியா் செந்தில் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து கலைந்து சென்றனா். முருகனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் முற்றுகை: அங்கு வியாழக்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்த இருந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் முருகன் உறவினா்களிடம் சோ்ந்து மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு சட்டரீதியான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உதவுவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனா். அதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின் முருகன் சடலத்தை குடும்பத்தினா் பெற்றுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com