இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம்
இளையான்குடியில் திங்கள்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் குடிபுகும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் இடையவலசை கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின் படி ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடையவலசை கிராம மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இடையவலசை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் குடும்ப அட்டைகளுடன் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தின் முன் உட்கார்ந்து குடிபுகும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வட்டாட்சியர் ஆனந்த் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இடையவலசை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அளவீடு செய்து அகற்றப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.