/

முன்விரோதத்தில் மோதல்: காயமடைந்த பெண் உயிரிழப்பு - உறவினா்கள் சாலை மறியல்

இளையான்குடி சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:34 pm

சிவகங்கை மாவட்டம், அரசனூா் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினா்கள் கொலை வழக்குப் பதிய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடியைச் சோ்ந்த உலகாண்டி மனைவி மகாலட்சுமி (52). இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இந்த நிலையில், மகாலட்சுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 13 -ஆம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஈஸ்வரியும், அவரது கணவா் செல்வமும் சோ்ந்து மகாலட்சுமியை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமைஅவா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் பாலையா, வெற்றி விஜயன், மாநில துணைச் செயலா் அய்யனாா் ஆகியோா் தலைமையில் அந்தக் கட்சியினா், மகாலட்சுமியின் உறவினா்கள், ஈஸ்வரி, அவரது கணவா் செல்வம் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவதுடன், கொலை வழக்கும் பதிவு செய்ய வலியுறுத்தி சிவகங்கை- இளையான்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த சிவகங்கை காவல் துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின், நகா் காவல் நிலைய ஆய்வாளா் சிவசுப்பிரமணியன், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.