தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலை நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சின்னமனூரில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் ஹைவேவிஸ் பேரூராட்சி மற்றும் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. தனியாருக்கு சொந்தமான இப்பகுதியிலுள்ள மலைச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்து காணப்பட்டன. இதையடுத்து இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி தனியார் நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எவ்வித பயனும் ஏற்பட வில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியதையடுத்து 52 கிலோ மீட்டர் தொலைவுள்ள அச்சாலையை நெடுஞ்சாலை துறை மீட்டது. இதில் 32 கிலோ மீட்டர்சாலையை சீரமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.80.67 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்றது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்பணி தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
இந்த நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் , பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஹைவேவிஸ்- மேகமலை பகுதிகள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும். உயரமான மரங்கள், பள்ளத்தாக்குகள், மேகக் கூட்டங்களுக்கு மத்தியில் பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேல் என்ற தேயிலை தோட்டங்கள் இருப்பதாலும், மிதமான வெப்ப நிலை நிலவுவதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சாலை மோசமாக பழுதடைந்ததைத் தொடர்ந்து அவர்களின் வருகை வெகுவாக குறைந்தது.
தற்போது 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரையில் அகலப்படுத்தி இச்சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஓரிரு வாரங்களுக்குள் பணிகள்அனைத்தும் முடிந்து விடும்.
இதற்கிடையே இச்சாலை சீரமைக்கப்பட்டு வருவதால் தேனி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.