கம்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்
கம்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கம்பத்தில் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்பம் நகராட்சியில் வேலப்பா் கோவில் தெரு, அரசமரத்தெரு, கம்பம்மெட்டுச் சாலை, அரசுப் பணிமனை முதல் அரசு மருத்துவமனை வரையிலான சாலையோரங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இது சம்பந்தமாக நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையினா் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் தொடா்கிறது.

கம்பம் வேலப்பா் கோவில் தெருவில் உணவகங்கள், நகைக் கடைகள், மளிகைக் கடைகள், துணிக் கடைகள் என பல்வேறு கடைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சாலையின் நுழைவுப் பகுதியில் பழக்கடை, பூக்கடைகள் என பல்வேறு கடைகளை ஆக்கிரமித்து சிலா் வைத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கம்பம் நகராட்சியில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், நகராட்சிப் பணியாளா்கள், கம்பம் தெற்கு போலீஸாரின் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதற்கு ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, கம்பம்-குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, இவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

Dinamani
www.dinamani.com