விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சூரிய ஒளி மின்சாரம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு துணை வேந்தர் பெ.கன்னியப்பன் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக, சக்தி மற்றும் சூழ்நிலைத் துறை முன்னாள் பேராசிரியர் சத்தியகீர்த்தி கருத்துரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது: தொழிற்சாலை கட்டடங்கள், குடியிப்புகள் அனைத்தும் சூரிய ஒளி அதிகம் உள்வருமாறு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் சூரிய ஒளிக்கான கண்ணாடிப் பட்டைகள், வீட்டு மேலோ அல்லது தொழிற்சாலையிலோ பொருத்தும் முன்பு, கட்டடங்களுக்குள் உள்ள பல்புகளை சி.எஃப்.எல். பல்புகளாக மாற்ற வேண்டும். சூரிய ஒளி மின்சாரம் 850 கிலோவாட் அளவு ஒரு சதுர மீட்டருக்கு கிடைக்கும். இதனைக் கணக்கிட்டு தேவைக்கேற்ப பேனலை பொருத்த வேண்டும் என்றார் அவர்.
கோயமுத்தூர், டெட்ரா பவர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரி குணசீலன், கட்டடக் கூரையில் டர்பைன் மூலம் மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
சென்னை, நெக்ஸ்ட்டர் நிறுவனத்தின் முகமது ரியாஷ், சூரிய ஒளி தெர்மல் பயன்பாடுகள் மற்றும் மரபுசாரா எரிசக்தியின் அமைப்புகள் குறித்து கருத்துரையாற்றினார்.
பல்கலைக்கழகத்தின் டீன்கள், அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்தின் எனர்ஜிசெல் தலைவர் டாக்டர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.