ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாறு மற்றும் தமிழ்த் துறையினர், சென்னை அரண் பன்னாட்டு ஆய்வு மின்னிதழுடன் இணைந்து கல்வெட்டு பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கில் கல்லூரி முதல்வர் ஏ.வெங்கட்ராமன் தலைமையுரை ஆற்றினார். அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நிறுவனர் பிரியா கிருஷ்ணன் அறிமுகவுரை ஆற்றினார். வரலாற்றுத்துறைத் தலைவர் வெங்கடேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.
தொல்லியல் வல்லுநர்
சொ.சாந்தலிங்கம், தமிழ் பிராமி எழுத்துக்கள், வட்டெழுத்து, நடுக்கல் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் முறை குறித்தும், கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் முறை குறித்தும் விளக்கமளித்தார்.
மேலும் சமணர் படுகைகள், பல்லவர்கால கல்வெட்டுகள் மதுரைச் சுற்றியுள்ள கல்வெட்டு ஆவணங்களை சான்றாதாரங்களுடன் எடுத்துரைத்தார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் வி.கலாவதி வரவேற்றார். தமிழ்த்துறை பேராசியர் க.கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினார்.