காரைக்கால் - திருவாரூா் இடையே திருச்சி பயணிகள் ரயில் ரத்து
திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சிக் கோட்டத்திற்குட்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, காரைக்கால் - திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில்கள் (76819 -76820) பிப்ரவரி 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந் நாள்களில் காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் திருவாரூரிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் மாலை 4.15 புறப்படும்.
பிப்ரவரி 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் (56817), வழியில் ஒரு பொருத்தமான இடத்தில் 15 நிமிடங்கள் நின்று செல்லும்.
பிப். 4, 5, 6 ஆகிய தேதிகளில் மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56002) பேரளம் - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து இந்த ரயில் பேரளம் வரை மட்டும் இயக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

